விமல் தீரசேகரவின் வெளியீடு
(லங்கா ஈ நியூஸ் 2020 பெப்ரவரி 27 முற்பகல் 08.45) பாராளுமன்றத்தை கலைப்பதற்கு தனக்கு கிடைக்கும் முதலாவது சந்தர்ப்பத்திலேயே அதனைக் கலைக்கும் தீர்மானத்தை ஜனாதிபதி நந்தசேன கோட்டாபய எடுத்துள்ளதால் கடந்த 20ஆம் திகதி இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வே இறுதியான பாராளுமன்ற அமர்வாக கருதப்பட்டது. பாராளுமன்றம் முடிவுக்கு வரும் தருவாயில் ஜனாதிபதி நந்தசேன சட்டவிரோதமாக சிவில் நிறுவனங்களுக்கு அமுதா இராணுவ அதிகாரிகளை நியமித்து மிக வேகமாக நாட்டை இராணுவ மயமாக்கி கொண்டிருக்கும் நிலையில் நாட்டின் பிரதான எதிர்க்கட்சி மற்றும் சட்டத்துறை வல்லுனர்கள் இது குறித்து கவனம் செலுத்தவில்லை.
ஜனாதிபதி இலங்கை சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் விஜித ரவிப்ரியவை நியமித்தமை அவரது சட்டவிரோத பிரதானமான நியமனம் ஆகும். 24 ஆம் திகதி இராணுவ சீருடையில் சென்று தனது சட்ட விரோத நியமனத்தில் கடமைகளை பொறுப்பேற்ற மேஜர் ஜெனரலுக்கு இதற்கு முன்னர் தமது உரிமைகளுக்காக போராடிய சுங்க அதிகாரிகளின் தொழிற்சங்கம் அதன் தலைவர்கள் கூட்டத்திற்கு நடுவில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.
மேஜர் ரவிப்பிரியவின் நியமனம் சட்டவிரோதமானது என கூறுவதற்கு காரணம் இதோ. இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 2005 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 28 ஆம் திகதி வெளியிடப்பட்ட 1419/3 என்ற இலக்கமுடைய அதி விசேட வர்த்தமானி அறிவித்தலின் படி இலங்கையின் நிர்வாக சேவையில் 'விசேட தரம்' (Super Grade) உள்ள அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டிய அமைச்சு மற்றும் திணைக்கள பிரதானிகளின் பதவி நிலை பல பெயரிடப்பட்டடுள்ளன. அதில் 28ஆவது பதவியாக சுங்க திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பதவி தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே சுங்க திணைக்கள பணிப்பாளர் நாயகமாக இலங்கை நிர்வாக சேவையில் விசேட தரத்தில் உள்ள அதிகாரி ஒருவரே நியமிக்கப்பட வேண்டும். ஆனால் இந்தப் பதவிக்கு ஓய்வு பெற்ற இராணுவ மேஜர் ஜெனரல் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி நந்தசேனவிற்கு உள்ள இராணுவ காய்ச்சலுக்கு ஏற்ப சுங்கத் திணைக்களத்திற்கு இராணுவ அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என்றால் சட்டத்திற்கு உட்பட்டு இலங்கை நிர்வாக சேவையின் விசேட தரத்தில் உள்ள நிர்வாக அதிகாரி ஒருவரை சுங்கத் திணைக்கள பணிப்பாளர் நாயகமாக நியமித்து அவருக்கு உதவி செய்வதற்கு என ஜனாதிபதி தனது அதிகாரத்தை பயன்படுத்தி இராணுவ அதிகாரி ஒருவரை நியமித்து இருக்க முடியுமே தவிர அந்த பதவிக்கு அல்லது பதவியை கண்காணிப்பு செய்ய இராணுவ அதிகாரியை நியமித்தமை சட்ட விரோதமான செயலாகும். சட்டத்தின் ஆட்சியை புரிய வந்த ஜனாதிபதிக்கு சட்டத்தை மீறி செயல்பட வாய்ப்பு அளிக்கக் கூடாது.
ஜனாதிபதி நந்தசேன தனது சட்ட விரோத நியமனத்தில் மேஜர் ஜெனரல் ஒருவர் உள்ளடங்களாக இரண்டாவது இராணுவ அதிகாரிகள் குழு ஒன்றை பொலிஸ் திணைக்களத்தின் குற்ற விசாரணை பிரிவு நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக நியமித்துள்ளார்.
இந்த சட்ட விரோத நியமனத்தை நியாயப்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்டு உள்ள மற்றுமொரு சட்டவிரோத நியமனத்தில் உள்ள பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன, ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் முன்னைய அரசாங்கம் மேற்கொண்ட விசாரணைகளில் எவ்வித பலனும் இல்லை என்பதால் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் மேற்கொண்டு வரும் குறித்த விசாரணைகளை கண்காணிக்கும் நோக்கில் தேசிய புலனாய்வு பிரதானி மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ் தலைமையிலான 6 இராணுவ புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அடங்கிய செயலணி உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இவர்களுடைய பொறுப்பு குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் முன்னெடுக்கும் விசாரணைகள் தொடர்பிலான முன்னேற்றங்களை கண்காணித்து வாரத்திற்கு ஒரு முறை தனக்கு அறிக்கை சமர்ப்பிப்பது என கமல் குணரத்ன கூறியுள்ளார். ஜனாதிபதியின் ஆலோசனையின் பேரிலேயே தான் இந்த நியமனங்களை வழங்கியதாக அவர் மேலும் கூறியுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் நியமிக்கப்படாமல் பாதுகாப்பு செயலாளர் ஒருவர் இருக்க முடியாது என்பதன் அடிப்படையில் ஓய்வு பெற்ற இராணுவ மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவின் நியமனம் சட்ட விரோதமானது. நாட்டில் தற்போது சட்ட ரீதியான பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் இல்லை. 19 ஆவது அரசியல் யாப்புத் திருத்தச் சட்டத்தின் பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தவிர அதற்குப் பின்னர் ஜனாதிபதியாக பதவி ஏற்கும் எவரும் பாதுகாப்பு அமைச்சை தன் வசம் வைத்திருக்க முடியாது. மேலும் பதில் பாதுகாப்பு அமைச்சராகவும் இருக்க முடியாது. தற்போதைய நிலைமையில் நாட்டில் பிரதமரிடம் பாதுகாப்பு அமைச்சு ஒப்படைக்கப்படவில்லை. அதன்படி கமல் குணரத்ன சட்டவிரோத நியமனத்திலேயே உள்ளார்.
பொலிஸார் முன்னெடுத்து செல்லும் ஏதேனும் விசாரணைகளை கண்காணிப்பதற்கான அதிகாரம் பொலிஸ் மா அதிபர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோருக்கு மாத்திரமே உள்ளது. இவ்வாறான நிலைமையில் சட்ட விரோதமாக நியமிக்கப்பட்டுள்ள பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன பொலிஸ் பிரிவின் குற்றப் புலனாய்வு திணைக்கள விசாரணைகளை கண்காணிப்பதற்காக இராணுவ அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்றை நியமித்துள்ளமை முழுமையான சட்டவிரோத செயல் ஆகின்றது. பொலிஸ் மா அதிபர் சட்டமா அதிபர் தவிர்ந்த வெளி நபர்களுக்கு போலீசாரின் விசாரணை குறித்து கண்காணிக்கவும் ஆலோசனை வழங்கவும் முடியாது. அவ்வாறு செய்தால் அது சட்டவிரோத செயலாகும். அதில் பொலிஸ் மா அதிபர் சி டி விக்ரமரத்ன அதிகாரம் இழந்து ஒரு மூலையில் இருக்கும் நிலையில் கமல் குணரத்னவின் சட்டவிரோத செயற்பாடுகள் குறித்து குறைந்தது சட்டமா அதிபராவது குரல் எழுப்ப வேண்டும்.
இதேவேளை ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் பொலிசார் முன்னெடுக்கும் விசாரணைகளை கண்காணிப்பதற்காக இராணுவ புலனாய்வு பிரிவை அனுப்பி உள்ளமை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. காரணம் ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதலை நடத்திய பிரதான சூத்திரதாரியான சஹரான் ஹாசிம் தலைமையிலான தவ்ஹீத் ஜமாத் அமைப்பை அப்போதைய இராணுவ புலனாய்வு பிரிவே உருவாக்கியுள்ளது. மேலும் தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹரான் ஹாசிமிற்கு இராணுவ புலனாய்வு பிரிவு சம்பளம் வழங்கியதாக அரசாங்கத்தின் இணை ஊடக பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல பகிரங்கமாக அறிவித்திருந்தார். எனவே குற்றப் புலனாய்வு பிரிவினரின் விசாரணையில் இராணுவ புலனாய்வு பிரிவு தொடர்பான தகவல்கள் வெளியாவதை தடுக்கும் நோக்கில் விசாரணையை கண்காணிக்க இராணுவ புலனாய்வு பிரிவு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளார்களா என்ற பலத்த சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
ஜனாதிபதி நந்தசேனவால் முன்னெடுக்கப்பட்டுள்ள மூன்றாவது சட்டவிரோத செயல் கொழும்பு போக்குவரத்து பிரிவு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்கில் இராணுவ மிலிட்டரி போலீசாரை நியமித்துள்ளமை ஆகும். இராணுவத்தில் மாத்திரமல்ல கடற்படை விமானப் படையிலும் மிலிட்டரி போலீசார் உள்ளனர். இந்த இராணுவ மிலிட்டரி போலீசாருக்கு உரிய கடமைகள் என்ன என்பது சட்ட ஏற்பாட்டில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இராணுவ சட்டம் கடற்படை சட்டம் விமானப்படை சட்டம் என்பவற்றின் ஊடாக இராணுவ போலீசாரின் கடமைகள் இராணுவத்திற்குள் முன்னெடுக்கப்படும் சட்ட விரோத செயற்பாடுகள் குறித்து ஆராய்ந்து இராணுவ நீதிமன்றத்தின் ஊடாக குறித்த நபர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுப்பதாகும். இவர்களுக்கு வீதிகளில் இறங்கி சிவில் போக்குவரத்து விதிமுறைகள் தொடர்பில் செயல்படுவதற்கு விஷேட சட்ட ஏற்பாடுகள் இருக்க வேண்டும். நந்தசேன தனக்கு ஏற்பட்டுள்ள இராணுவ காய்ச்சலை சுகப் படுத்திக்கொள்ள செய்ய வேண்டியது இந்த இராணுவ சட்டம் கடற்படை சட்டம் விமானப்படை சட்டம் என்பவற்றில் தேவையான திருத்தங்களை ஏற்படுத்தி குறித்த இராணுவ மிலிட்டரி போலீசாரை தனது தேவைக்கேற்ப பயன்படுத்திக் கொள்வதாகும். ஆனால் அவர் அதனை செய்யவில்லை.
பொது மக்கள் பாதுகாப்பு உறுதிப்படுத்தும் நோக்கில் இராணுவத்தை அழைப்பதாக வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டு மிலிட்டரி போலீசாருக்கு சிவில் செயற்பாடுகளை பொறுப்பளிக்க முடியாது. அப்படி செய்வதானால் பாராளுமன்றத்துக்கு புதிய சட்டமூலம் ஒன்றைக் கொண்டுவந்து மிலிட்டரி போலீசாருக்கு இருக்கக்கூடிய கடமைகள் தொடர்பில் சட்டமூலம் நிறைவேற்றி புதிய வர்த்தமானி மூலம் அறிவித்து செயல்பட வேண்டும். இலங்கையில் யுத்தம் இடம்பெற்ற காலத்தில் பயணிகளின் பஸ்களை சோதனை செய்வதற்கு பொலிசாரின் உதவியை பெற்று இராணுவத்தினர் நடவடிக்கை எடுத்தனர் என்பதனை மறந்து விடக்கூடாது. காரணம் அவசரகால சட்டம் காணப்பட்டாலும் சிவில் செயற்பாடுகளில் போலீசாரே தலையிட முடியும் என்பதாகும்.
ஜனாதிபதி நந்தசேன இவ்வாறு சட்ட விரோதமான முறையில் பொலிசாரின் சிவில் செயற்பாடுகளுக்கு இராணுவ தலையீட்டை ஏற்படுத்துவாரே ஆனால் விரைவில் இலங்கையில் உள்ள போலீஸ் நிலையங்களில் பொறுப்பதிகாரிகளுக்கு மேலிடத்தில் இராணுவ அதிகாரி ஒருவர் நியமிக்கப்படுவார் என்பது நடக்கக் கூடியதே.
நாங்கள் மீண்டும் மீண்டும் நினைவுபடுத்துவது இவ்வாறு செயல்பட வேண்டுமானால் சட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்தி அதன் அடிப்படையில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஆனால் இதுவரையில் ஜனாதிபதி நந்தசேன தான் சட்டத்தை மதிக்காது செயல்படும் நபர் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார். இதற்கு சிறந்த உதாரணம் "சட்டதிட்டங்கள் காரணமாக சாதாரண நபர் ஒருவருக்கு சுதந்திரமாக வாழ முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது" என கடந்த 20ஆம் திகதி இடம்பெற்ற அகில இலங்கை சமுர்த்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி உதவி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் 22 ஆவது வருடாந்த சம்மேளனத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோது ஜனாதிபதி நந்தசேன கருத்து தெரிவித்தார். நந்தசேன என்பவர் சட்டத்திற்கு மாறான மனிதக் கொலை புரிந்து, நிதி மோசடி செய்து, அரச பணத்தை மோசடி செய்து நீதிமன்றங்கள் பலவற்றில் விசாரணைகளை எதிர்கொண்டு நாட்டின் தலைவராக மாறிய பின்னர் கிடைக்கும் விடுதலையால் உள்ள நபர். எனவே இப்படியான ஒருவர் இவ்வாறு செயற்படுவது எதிர்பார்த்தது என்றபோதும் அதற்கு அனுமதி அளிக்க முடியாது.
69 லட்சம் மக்கள் வாக்களித்ததால் தனக்கு என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் என்ற நினைப்பில் அமெரிக்கன் நந்தசேன இருந்தால் அவர் வாளை மிதித்துக் கொண்டு இருக்கின்றார் என அர்த்தம்.
மேற்கூறியவாறு நாட்டின் ஜனாதிபதி நந்தசேன கடந்த சில நாட்களாக சட்ட விரோதமான முறையில் செயற்பட்டு நாட்டை விரைவான இராணுவ மயமாக்கலுக்கு கொண்டு செல்லும் நிலையில் பலாத்காரமாக எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பெற்றவர் தோற்கடிக்கப்பட்ட மரண தூக்கத்தில் உள்ளார். காரணம் ராஜபக்ஷக்களை விடவும் இவருக்கு அதிகமான 'இராணுவ காய்ச்சல்' ஏற்பட்டுள்ளதனாலாகும். இராணுவ நியமனங்கள் குறித்து கதைத்தால் தனது இராணுவ விருப்ப காய்ச்சலுக்கு பங்கம் ஏற்பட்டுவிடும் என அவர் நினைக்கிறார்.
எதிர்க் கட்சித் தலைவரை குளிர் காயுமாறு கூறிவிட்டு அதிகரித்து வரும் சட்டவிரோத மோசமான இராணுவ மயமாக்கலுக்கு எதிராக குரல் கொடுப்பதற்கு முன்னிற்பதற்கு சட்டத்தை மதிக்கும் பிரஜைகள், சட்டத் துறையில் உள்ளவர்கள் மற்றும் உண்மையான ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் முக்கிய கடமை பொறுப்பு உள்ளது.
எழுத்தாளரின் முன்னைய கட்டுரைகளின் தொகுப்பு
https://www.lankaenews.com/category/4
---------------------------
by (2020-02-27 02:59:30)
Leave a Reply