(லங்கா ஈ நியூஸ் 2019 டிசம்பர் 22 முற்பகல் 08.10) ராஜபக்ஷவின் குடும்பத்தை கடுமையாக விமர்சித்த கடந்த அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சர்கள் இருவரை வேட்டையாட கோட்டாபய ராஜபக்சவின் இனவாத அரசாங்கம் தயாராகி வருவதாக லங்கா ஈ நியூஸ் இணையத்திற்கு செய்து வந்துள்ளது.
இவ்வாறு வேட்டையாட முயற்சிக்கப்படும் முன்னாள் அமைச்சர்கள் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மற்றும் ராஜபக்சக்கள் கைவிட்டு நல்லாட்சி அரசாங்கத்துடன் இணைந்து கொண்ட விஜித் விஜயமுனி சொய்சா ஆகியோர் என தெரியவந்துள்ளது. இந்த இரு முன்னாள் அமைச்சர்களும் கடந்த ஜனாதிபதி தேர்தலில் அன்னம் சின்னத்திற்கு ஆதரவாக மேடைகளில் பேசியவர்களில் மிக முக்கியமானவர்கள் ஆவர். தேர்தலுக்கு முன்னரும் தேர்தலின் பின்னரும் ராஜபக்சக்களை இவர்கள் மிகவும் கடுமையாக விமர்சித்தனர்.
ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் வன ஜீவராசிகள் அமைச்சராக விஜித் வியஜ முனி சொய்சா செயல்பட்டபோது நாட்டிலுள்ள வன ஜீவராசிகள் காரியங்களுக்கு வெளிநாட்டில் இருந்து சுமார் 80 ஜீப் வண்டிகள் இறக்குமதி செய்த திட்டத்தில் மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தியே அவரை வேட்டையாட முயற்சிக்கப்படுகிறது.
இது தொடர்பில் லங்கா ஈ நியூஸ் முன்னாள் அமைச்சர் விஜித் விஜய முனி சொய்சாவிடம் வினவியபோது, இந்த ஜீப் வண்டிகள் கொள்வனவு செய்யப்பட்டமை மற்றும் அதற்கான நிறுவனம் தெரிவு செய்யப்பட்டமை உள்ளிட்ட அனைத்தும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் முன்னெடுக்கப்பட்டதாகவும் இந்த திட்டத்திற்கான அமைச்சரவைப் பத்திரத்தில் கையொப்பம் இட்டது மாத்திரமே தனது செயல் எனவும் தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படுமானால் அது மிகவும் சிறந்த விடயம் எனவும் அப்போது தான் பசில் ராஜபக்சவின் கூத்துக்களை தன்னால் நீதிமன்றத்தில் நிரூபித்துக் காட்ட முடியும் எனவும் தெரிவித்த அவர், இவ்வாறான பயமுறுத்தல்கள் மூலம் தன்னை அரசியல் ரீதியாக நலிவடையச் செய்து சிறைக்கு அனுப்ப முயற்சித்து தனது அரசியல் பயணத்தை தடுக்க முடியாது என விஜித் விஜய முனி சொய்சா தெரிவித்தார்.
இதேவேளை சம்பிக்க ரணவக்கவிற்கு செய்தது போல பழைய வழக்கு ஒன்றை மீண்டும் தோண்டி எடுத்து அதன்மூலம் பீல்ட் மாஸ்சல் சரத் பொன்சேகாவை வேட்டையாட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2010ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக சரத் பொன்சேகாவிற்கு வழங்கப்பட்ட நன்கொடை பணத்தை அவர் வைத்திருந்தமை தொடர்பிலேயே மீள விசாரணை செய்யப்பட உள்ளது. இந்த வழக்கு நிறைவு பெற்றிருந்த போதும் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் குறித்த பணம் சரத் பொன்சேகாவிற்கு திருப்பி அளிக்கப்பட்டு இருக்க வேண்டிய நிலையில் அப்போதைய நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ மற்றும் சரத் பொன்சேகா இடையே காணப்பட்ட முறுகல் நிலை காரணமாக குறித்த பணம் இன்னும் விடுவிக்கப்பட வில்லை. பின்னர் நீதி அமைச்சராக நியமிக்கப்பட்ட தலதா அத்துகோரலவிடம் இது தொடர்பாக சரத் பொன்சேகா கோரிக்கையை முன்வைத்த போதும் அவரும் இன்று நாளை என ஏமாற்றினாரே தவிர குறித்த பணத்தை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதற்குக் காரணம் ஆரம்பத்தில் சரத் பொன்சேகா சஜித் விரோதியாக காணப்பட்டதோடு தலதா அத்துகோரல சஜித்தின் தீவிர ஆதரவாளராக காணப்பட்டமை ஆகும். குறித்த பணம் இன்னும் நீதிமன்றத்திற்கு கீழ் இருப்பதால் குறித்த வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொண்டு சரத் பொன்சேகாவை வேட்டையாடும் முயற்சியில் கோட்டாபய ராஜபக்சவின் இனவாத அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.
2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவை எதிர்த்து போட்டியிட்ட சரத் பொன்சேகா தேர்தல் முடிந்த பின்னர் நடு வீதியில் இழுத்துக் கொண்டு செல்லப்பட்டு பொய் குற்றச்சாட்டுக்களை சுமத்தி அவரை ராஜபக்ச அரசாங்கம் சிறையில் அடைத்தமை யாவரும் அறிந்ததே.
மேற்கூறிய இரண்டு முன்னாள் அமைச்சர்களையும் கைது செய்யும் நோக்கில் அவர்களுக்கான குற்றச்சாட்டுக்களை தயாரிக்கும் வேலைத் திட்டத்தில் சட்டமா அதிபர் திணைக்களம் இரவு பகல் பாராது ஈடுபட்டு வருகிறது. கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கத்தில் விசாரணைகளை முன்னெடுக்கும் புதிய நிறுவனமாக போலீஸ் அல்லாமல் சட்டமா அதிபர் திணைக்களம் திகழ்வது விசேட அம்சமாகும்.
லங்கா ஈ நியூஸ் இதற்கு முன்னர் சம்பிக்க மற்றும் ராஜித போன்ற முன்னாள் அமைச்சர்கள் தொடர்பில் முன்கூட்டியே தகவல்களை வெளியிட்டு இருந்தது. அது தற்போது உண்மையாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
---------------------------
by (2019-12-23 11:35:43)
Leave a Reply